நாட்குறிப்பின் மேல்
இருந்தது அந்தச் சிறு இறகு.
மிஞ்சிப் போனால்
ஒரு அகத்தி இலை அளவு
இருக்கும்.
இறகுக் காம்பில் சற்று வெள்ளை
மேலே பொட்டு வைத்தது போலக்
கரும் பழுப்பு.
கிடைக்காதது கிடைத்தது என
என் ரசனையின் கொண்டையில்
செருகிக் கொண்டேன் ஒன்றிரண்டு விநாடிகள்
அத்துடன் அது முடிந்தது.
அப்புறம்
இதை உதிர்த்த அல்லது
அதை இழந்த
பறவையைப் பற்றிய
யோசனையில்
ஒரு வித பாரம்
வானத்திலிருந்து என்னைக்
கீழ் இழுத்துக் கொண்டிருந்தது.
ஏதேனும் ஒரு
அடர்ந்த மரத்தின் கிளையில்
என்னைக் கொண்டு சேர்க்குமெனில்
கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பேன்.
-கல்யாண்ஜி
2 comments:
நல்லதோர் பகிர்வு. உங்களின் பக்கம் வந்தேன். படித்தும் முடித்தேன்(ஒருபக்கம் என்பதால் ) வாழ்த்துகள். எழுதுக ... நிறையவே ... (Follower பக்கம் Active செய்தால் வசதியாக இருக்கும் .. நன்றி )
'மழை ஓவியம்' தலைப்பு மிக அருமை இதற்கு தனிப்பட்ட வாழ்த்துகள்
Post a Comment